Published On Oct 10, 2024
#அங்கோரிய_எச்சங்களை_கண்டறிதல்#
#நான்கு பக்கமும் ஏழு மீட்டர் உயரத்திலான மதிற்சுவரால் சூழப்பட்ட 13 ம் நூற்றாண்டு நகரம் தான் இப்போது முவாங் சிங் வரலாற்றியல் பூங்கா என்றழைக்கப்படுகின்றது.
பலத்த சிதைவுக்கு உள்ளாகியுள்ள இங்கு காண்பதற்கு சிலவே உள்ளது. எனினும், வரலாற்று விரும்பிகளுக்கு இவ்விடம் உவப்பானதாகவே உளது!
தாய்லாந்து தலைநகரத்திலிருந்து 175 கிமீ தொலைவிலும் ,கஞ்சனாப்புரி நகரத்திலிருந்து 40 கிமீ தூரத்திலுமுள்ளது முவாங் சிங் !
மலைகள் நிறைந்த கஞ்சனாப்புரி பிராந்தியம் மாழை(உலோகம்) ஊழிக் காலத்து எச்சங்கள் பலவும் கண்டெடுக்கப்பட்ட வட்டாரம் ஆகும்.
வேளண்மைக்கு ஏற்ற நீர் மற்றும் மண் வளம் கொண்ட பகுதிகளை ஒட்டியே நகரங்களை எழுப்பியிருக்கின்றனர் அன்றைய ஆட்சியாளர்கள். அத்தகைய நகரங்களில் சில பின்வரும் பெயர்களில் இலங்கியுள்ளன.
1) இலாவோத்யபுரம்
2) சுவர்ணபுரம்
3) சம்புக பட்டணம்
4) ஜெயராஜபுரி
5) சிறீஜெய சிங்கப்புரி
6) சிறீஜெய வஜ்ரபுரி
போல்வன அவையளில் சில.
இன்றைக்கு முவாங் சிங் என்ற சயாமிய பெயர் கொண்ட இடமே அந்நாளைய சிறீஜெய சிங்கப்புரியாக இருந்திருக்கலாம் என்று கருதுகின்றனர் ஆய்வாளர்கள்.
இங்கு கிடைத்த செப்பேட்டு குறிப்பு ஒன்றின் படி ; அங்கோர் பேரரசின் பொற்கால வேந்தன் எனப்படும் ஏழாம் செயவர்மனின் புதல்வர்களுள் ஒருவனான இளவரசன் வீரக்குமரன், இப்பிராந்தியத்தின் ஆட்சிப் பொறுப்பேற்றிருந்திருக்கக் கூடும் என்பது ஆய்வாளர் தம் துணிபு!