Published On Apr 16, 2024
பரிபாடல், தொல்காப்பியம் தொடங்கி நற்றிணை, திரிகடிகமென சங்கப்பாடல்களில் இடம் பெற்று, பின் இளங்கோவடிகளால் புகழாரம் சூட்டப்பட்ட ஓர் தமிழ்ச் சமய நெறி திருமாலியம் என்பது. தமிழ்ச் சமயங்களில் மூத்ததும் இன்றுவரை ஓர் தொடர்ச்சியும் கொண்டது வைணவம். விஷ்ணு எனும் சொல் வடசொல் அல்ல. எவ்வாறு தமிழ் என்பதை ஒலிக்கவியலாது திராவிடம் என வடமொழி சொல்கிறதோ அது போல் விட்டு எனும் சொல்லே விஷ்ணு என்றாகிறது. இதையறியாது அதை ஆரிய மரபு எனப் பிழையாக அடையாளப் படுத்துவோருண்டு.
ஒரு பிரச்சனை என நாம் நினைக்கும் ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ளாதவரை அதற்குத் தீர்வு காணமுடியாது. அத்தகைய பிரச்சனைகளில் ஒன்று கடவுள் பற்றியது. கடவுள் எனும் கருதுகோளில் தெளிவில்லாமல் நாத்திகரும் ஆத்திகரும் அடித்துக் கொள்கின்றனர். இப்பேச்சில் ஆதித்தமிழர் கடவுள் என்பதை எவ்வாறு அறிந்து வைத்திருந்தனர் என விளக்கி அதை எவ்வாறு உள்ளுறை உவமமாக்கிப் பயன்படுத்தினர் எனக் காட்டுகிறேன். மேலும் சங்ககாலத்தில் இறை நம்பிக்கை என்பது கிடையாது அது பின்னால் ஆரியர் கொண்டு வந்தது என்பது போன்ற உளறல்களுக்கு தீர்க்கமான விடையை இப்பேச்சு அளிக்கும்.
வடவேதம் எனச் சொல்லும் போதே தென்வேதமொன்று இருந்தது என்பதை ஒத்துக்கொள்வதாகும். இவ்வேதம் காணாமல் போய் பின்னால் இறைவனே பேசும் பேச்சாக நம்மாழ்வார் அதை அருளிச் செய்கிறார். நாதமுனிகளுக்கு நாலாயிரமும் நம்மாழ்வார் வாய்மொழியாக கிடைக்கப்பெறுகிறது. அதுவே தமிழ் வேதம். இது அடிப்படையிலேயே வட வேதத்திலிருந்து வேறுபடுகிறது. இதன் நடை கவிதையில் இருக்கிறது. இதன் பேச்சு தலைவி, செவிலி, தாய் எனும் பாத்திரங்களின் வழியாக தமிழ் அகமரபைச் சார்ந்து வருகிறது.
ஏறக்குறைய ஒன்றறை மணி நேரம் நீள்கிறது பேச்சும், கேள்வி பதிலும். பொறுமையுடன் கேட்டால் பயனடைவீர்கள்.