Published On Sep 16, 2024
இந்து முன்னணி சார்பில் மாங்காட்டில்
விநாயகர் சிலை ஊர்வலம்
விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு மாங்காடு, குன்றத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 80-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு 9-நாட்கள் வழிபாடு நடைபெற்றன.
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி அன்று இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக கடலுக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி மாங்காடு எஸ்.எஸ் கோவில் தெருவில் நடைபெற்றது.
இந்து முன்னணியின் காஞ்சி மாவட்ட துணைத் தலைவர் கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம் தொடக்க விழாவில் ராஷ்டிய சுயம் சேவா சங்கத்தின் குடும்ப நலத்துறை மாநில செயலாளர் காஞ்சி.பிரகாஷ்,
பாஜக மாநில விவசாய அணி முன்னாள்
துணை தலைவர் மலையம்.சம்பத், பாஜக பிரமுகர் தேவராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கி,
ஊர்வலத்தை
கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
மாங்காடு எஸ்.எஸ் கோவில் தெருவில் இருந்து புறப்பட்ட விநாயகர் சிலைகளின் ஊர்வலமானது குன்றத்தூர் சென்றதும் அங்கிருந்து புதுநெல்லூர், அமரம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கலந்து கொண்டன.
குன்றத்தூரில் இருந்து பல்லாவரம், மீனம்பாக்கம், திருவான்மியூர், பாலவாக்கம் வழியாக நீலாங்கரை கடலுக்கு விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் கார்த்திகேயன், மாங்காடு.வினோத், நிர்வாகிகள், தொண்டர்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.